யுபிஐ முதல் கடன் வரை: தங்களின் நிதி செயல்பாடுகளை மாற்றி வரும் இந்திய சிறு குறு தொழில்கள்
யுபிஐ முதல் கடன் வரை:
தங்களின் நிதி செயல்பாடுகளை
மாற்றி வரும் இந்திய சிறு குறு தொழில்கள்
உமேஷ் அரோரா
(தலைவர் – வளர்ந்து வரும்
வணிகம், உஜ்ஜிவன் ஸ்மால்
பைனான்ஸ் வங்கி)
கோவை, செப். 2-
இந்தியாவின் சிறு,
குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை, பணத்தை நிர்வகிக்கும் முறை மற்றும் கடன் பெறும்
முறை ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டு வருகிறது. குறிப்பாக, யுபிஐ போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள், சிறு வணிகர்கள்
பணப்பரிமாற்றம் செய்யும் மற்றும் கணக்குகளைப் பராமரிக்கும் முறையை முற்றிலுமாக
மாற்றியுள்ளது. யுபிஐ என்பது வெறும் பணப்பரிவர்த்தனைக்கான வசதி மட்டுமல்ல; அது வியாபாரிகளின்
பழக்கங்களை மாற்றி,
நிதி ஒழுக்கத்தை உருவாக்கி, லட்சக்கணக்கான சிறு தொழில்களுக்கு முறையான கடன் கிடைக்கப்
புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ரொக்கத்திலிருந்து டிஜிட்டலுக்கு
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பல சிறு தொழில்கள் பெரும்பாலும் ரொக்கப் பணத்திலேயே நடைபெற்றன.
வியாபாரம் நன்றாக நடந்தாலும், அதற்கான முறையான கணக்குப் பதிவுகள் இல்லாததால் வங்கிகளில்
கடன் பெறுவது சவாலாக இருந்தது. ஆனால் இன்று, ஒவ்வொரு QR கோடு பரிவர்த்தனையும், வங்கிப்
பணப்பரிமாற்றமும் அந்த நிலையை மாற்றியுள்ளன. ஒவ்வொரு பரிவர்த்தனையும்
வியாபாரத்தின் ஆதாரமாக மாறி, அது வங்கிகளின் நம்பிக்கையை உருவாக்குகிறது.
வியாபாரிகளின் பழக்கவழக்கங்களில் மாற்றம்
நாடு முழுவதும் வியாபாரிகளிடம் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது.
அவர்கள் இப்போது டிஜிட்டல் முறையை வெறும் வசதிக்காக மட்டும் பயன்படுத்துவதில்லை.
வங்கிக் கணக்குகளைச் சரியாகப் பராமரிப்பதும், டிஜிட்டல் முறையில் பணம் பெறுவதும் தங்களுக்கு
எளிதாகக் கடன் கிடைக்க உதவும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். தொடர்ந்து டிஜிட்டல்
முறையில் பணம் பெறும் ஒரு சிறிய மளிகைக் கடைக்காரரோ அல்லது சிறு உற்பத்தியாளரோ, முன்பு இல்லாத ஒரு
புதிய "நிதி அடையாளத்தை" இப்போது உருவாக்குகிறார்கள். இது இந்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் நடக்கும்
மிகப்பெரிய மாற்றமாகும்.
ஸ்மார்ட்போனே இப்போது 'மினி பேங்க்'
சிறு நகரங்களில் உள்ள பல வியாபாரிகளுக்கு, ஸ்மார்ட்போன் தான் இப்போது கணக்காளர், பணப்பரிவர்த்தனை
இயந்திரம் மற்றும் வங்கி மேலாளர் என அனைத்தாகவும் செயல்படுகிறது. கணக்கு
தொடங்குவது, பணம் அனுப்புவது, பேலன்ஸ் பார்ப்பது, கடனைத் திருப்பிச்
செலுத்துவது என அனைத்தும் இப்போது சில நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. இந்த
எளிமையான அணுகுமுறை,
வங்கிகளுடனான வியாபாரிகளின் தொடர்பை அதிகரித்துள்ளதுடன், தயக்கமின்றி
வங்கிகளுடன் செயல்படவும் உதவுகிறது.
தொழில்நுட்பத்தால் எளிதாகும் கடன்கள்
சிறு தொழில்களுக்குக் கடன் வழங்குவதில் வங்கிகளுக்கு இருந்த மிகப்பெரிய
பிரச்சனை, வியாபாரிகளிடம்
முறையான கணக்கு அறிக்கைகளோ அல்லது அடமானம் வைக்கச் சொத்துகளோ இல்லாததுதான்.
இப்போது தொழில்நுட்பம் இந்தக் குறையைத் தீர்க்கிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை
முறைகள் மற்றும் வங்கிச் செயல்பாடுகள் மூலம், ஒரு வியாபாரத்தின் ஆரோக்கியத்தை வங்கிகளால் கணிக்க
முடிகிறது. பரம்பரைச் சொத்துகள் ஏதுமின்றி, தங்களின் சொந்த உழைப்பால் தொழிலை உருவாக்கிய முதல்
தலைமுறை தொழில்முனைவோருக்கு, இந்த டிஜிட்டல் தரவுகளின் அடிப்படையில் கடன் கிடைப்பது ஒரு
மிகப்பெரிய வரமாகும்.
வியாபாரம் செய்யும் எவருக்கும் ஒரு விஷயம் நன்றாகத் தெரியும்: வியாபார
வாய்ப்புகள் யாருக்காகவும் காத்திருக்காது. ஒரு சில்லறை வியாபாரிக்கு பண்டிகைக்கு
முன்பு பொருட்களை வாங்கி வைக்க வேண்டியிருக்கலாம். ஒரு விநியோகஸ்தருக்கு
எதிர்பாராமல் பெரிய ஆர்டர் கிடைக்கலாம். உற்பத்தியை நிறுத்தாமல் இருக்க, ஒரு உற்பத்தியாளர்
உடனடியாக மூலப்பொருட்களை வாங்க வேண்டியிருக்கலாம். இதுபோன்ற நேரங்களில், கடன் கிடைக்க
வாரக்கணக்கில் காத்திருந்தால் வியாபாரத்தை இழக்க நேரிடும்.
எளிமையான கடன்கள்
எனவே, சிறு தொழில்களுக்கான
கடன்களின் எதிர்காலம் என்பது மிகவும் வேகமான மற்றும் எளிமையான கடன் முறைகளில்தான்
உள்ளது. அது டிஜிட்டல் முறையிலான இணைப்பாக இருந்தாலும் சரி, அல்லது முன்பே
அங்கீகரிக்கப்பட்ட கடன் அளவாக இருந்தாலும் சரி, வியாபாரம் நடைபெறும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும்
வகையில் எளிதாகக் கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வியாபாரத்தோடு இணைந்த கடன் வசதி
இப்போதெல்லாம்,
கடன் பெறுவது என்பது தனி வேலையாக இல்லாமல், வியாபாரம் நடக்கும்போதே அதன் ஒரு அங்கமாக மாறி
வருகிறது. ஒரு வியாபாரி டிஜிட்டல் முறையில் மொத்தமாகப் பொருட்களை வாங்கும்போதே, அதற்கான குறுகிய கால
கடனையும் அங்கேயே உடனடியாகப் பெறுவதை கற்பனை செய்து பாருங்கள். வியாபாரத்தையும்
நிதியையும் இப்படி இணைப்பது பணப்புழக்கத்தை அதிகரிக்கும்; கந்துவட்டி போன்ற
முறைசாரா கடன்களை நம்பியிருப்பதைக் குறைக்கும். சிறு தொழில்களைப் பொறுத்தவரை, சேமிக்கப்படும்
நேரம் என்பது சம்பாதிக்கப்படும் பணம் ஆகும்.
மனிதத் தொடர்பும் அவசியம்
தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும், கடன் வழங்குவதை வெறும் கம்ப்யூட்டர் மட்டுமே
செய்யும் வேலையாக மாற்றிவிட முடியாது. சிறு தொழில்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டவை. ஒரே
அளவு வருமானம் கொண்ட இரண்டு வியாபாரிகளுக்கு, அவர்களின் அனுபவம் மற்றும் உள்ளூர் சந்தை
நிலவரத்தைப் பொறுத்து லாப நஷ்ட அபாயங்கள் முற்றிலும் மாறுபடும். எனவே, தொழில்நுட்பம்
என்பது மனிதனின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்த வேண்டுமே தவிர, அதை முழுமையாக
மாற்றக்கூடாது.
டிஜிட்டல் நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை
இந்திய சிறு தொழில்களின் பயணம் இப்போது வெறும் தொழில்முனைவு பற்றியது
மட்டுமல்ல; அது டிஜிட்டல்
நம்பிக்கை பற்றியது. ஒரு காலத்தில் பணத்தைச் செலுத்த வங்கியில் வரிசையில் நின்ற
வியாபாரி, இன்று உடனடியாகப்
பணத்தைப் பெறுகிறார். வெளியில் வட்டிக்கு பணம் வாங்கியவர், இப்போது
முறைப்படுத்தப்பட்ட வங்கிக் கடன்களை நாடுகிறார். இது யாரோ கட்டாயப்படுத்தியதால்
வந்த மாற்றம் அல்ல;
வரவு செலவுகளில் வெளிப்படைத்தன்மை இருந்தால் புதிய வாய்ப்புகள் தேடி வரும்
என்பதை வியாபாரிகள் உணர்ந்ததால் வந்த மாற்றம்.
வங்கிகளின் பொறுப்பு
இதில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பொறுப்பும் முக்கியமானது. சிறு
தொழில்களின் உண்மையான தேவைகளைப் புரிந்துகொண்டு, எளிமையான மற்றும் அனைவரும் எளிதில் அணுகக்கூடிய
நிதித் திட்டங்களை நாங்கள் தொடர்ந்து உருவாக்க வேண்டும்.
சிறு, குறு தொழில்களின்
அடுத்தகட்ட வளர்ச்சி பெரிய தொழிற்சாலைகளாலோ பெரிய முதலீடுகளாலோ மட்டும்
வரப்போவதில்லை. டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் முறையான நிதியைப் பயன்படுத்தி, தங்கள் தொழிலை
வலுவாக்கும் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளால்தான் அது சாத்தியமாகும்.
சில நேரங்களில்,
மாபெரும் புரட்சிகள் பெரிய அறிவிப்புகளோடு தொடங்குவதில்லை. ஒரு சிறிய
கடைக்காரர் தனது கடையில் ஒரு QR கோடை வைப்பதில் இருந்துகூட அது தொடங்கலாம்.
***
Comments
Post a Comment